அம்புலிப் பருவம்
எம்மைஇனி தாள்பவன் செம்மைமதி யவன்நீ
இயற்கையே
வெண்மைமதியோன்
எற்றைக்கும் மிகுதண்மை யுடையரோ டுறவுகொளும்
இயல்பினால்
எங்கள்ஐயன்
வெம்மையுடை யவர்களொடு மதிதொறும் மதிதொறும்
விராய்உறவு
கொள்ளுவோன்நீ
வியக்கும்ஒரு தன்மையோன் எங்கள்கிரு பாமூர்த்தி
மெய்ம்மைஒரு
கால்வளருவாய்
மும்மையுல கறியஒரு கால்தேய்கு வாய்இவை
முயங்காதொர்
கால்ஒழிகுவாய்
மொழியும்நீ இவைஓர்ந்தும் ஆடவா என்றது
முழுக்கருணை
காண்எஞ்ஞான்றும்
அம்மைஅனை யார்மருவு குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ
ஆடவாவே
அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
[அ. சொ.] செம்மை-செம்மையான, மதியவன்-அறிவுடையவன், அதாவது செம்பொருள் காணும் அறிஞர், வெண்மை மதியோன்-வெள்ளிய சந்திரன், வெள்ளறிவுடையவன். அறிவீனன் என்பது கருத்து. எற்றைக்கும்-எக்காலத் தும், தண்மை-குளிர்ந்த அருட்பண்பு, இயல்பினால்-தன்மையால், வெம்மையுடையவர்கள்-பன்னிரண்டு சூரியர்கள், மதிதொறும்-மாதந்தோறும், விராய்-கலந்து, ஒருகால்-ஒரு பட்சத்தில், மும்மை உலகு-சுவர்க்க, மத்திமம் பாதாளமாகிய மூன்று உலகங்கள், இவை-இவ்வாறான தேய்தலும், வளர்தலும், முயங்காது-சேராமல்படி, ஓர்ந்தும்-அறிந்தும், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அம்மை - தாய், அனையார்-போன்றவர், மருவு-சேரும், அ+மை எனப்பிரித்து அந்த மேகம் போன்ற கொடையுடையவர் எனினும் ஆம்.
விளக்கம் : இப் பாடலும் சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையினைக் கூறுகிறது. சேக்கிழார் அன்பர்களை என்றும் அடிமை கொண்டு அருள்பவர் ஆதலின் எம்மை இனிது ஆள்பவன் என்றனர். சேக்கிழாரது அறிவு செம்பொருள் காணும் அறிவு. செம்பொருளாவது இறைவன். இதனைச் சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான் என்னும் அப்பர் அருள் மொழியால் தெளியலாம். திருவள்ளுவரும் இத்தகையவரை செம்பொருள் கண்டார் என்றே குறிப்பிட்டுள்ளனர். சந்திரன் வெண்மை மதியோன். அதாவது வெள்ளிய நிறமுடையன் இங்குக் கருதிய பொருள் பேதமையான அறிவுடையவன் என்பதாம். இப்பொருட்டாதலைத் திருவள்ளுவர் வெண்மை எனப்பதுவது யாதெனில் என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளதைக் காணவும். பறிமேலழகர் வெண்மை என்னும் சொல்லுக்கு அறிவு முதிராமை என்று விளக்கம் தந்ததைக் காண்க. கம்பர் இப் பொருளில் இச் சொல்லை ஆண்டதை வெண்மை இல்லை பல கேள்வி மேவலால் என்ற தொடரில் அறிக. நாலடியாரும், வெண்மையுடையார் விழுச் செல்வம் என்கிறது. சேக்கிழார் இறைவனடி சேர்ந்த மெய்யன்பர்களிடத்தும், மாலற நேயம் மலிந்தவரிடத்தும் அன்புடையராய், அவர்களோடு உறவு கொண்டாடுபவர். இதனை இவர், மயலில்சீர்த் தொண்டனாரை யான்அறி வகையால் வாழ்த்தி, உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பு நம்பெருமான் என்றும், தூது கொள்பவ ராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வாம் என்றும் தாம் அடியரோடு உறவுகொண்டு உரைத்த மொழிகளைக் கொண்டு உணரலாம். ஆகவே, அவரை தண்மையுடையவரோடு உறவு கொள்ளும் இயல்பினான் என்றனர். தண்மையுடையவர்கள் பிறவியாம் கோடை நீங்கி, இறைவன் திருவடியாம் தண்ணடி சேர்ந்தவர்கள்.
சந்திரன் பன்னிரண்டு ராசிகளிலும் சூரியனுடனும் தங்கித் தங்கி வருபவன். மேலும், அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றுபடுகிறார்கள் என்பது சோதிட மரபு. சோதிட நூல்படி கருதப் படுகின்ற பாபக் கிரஹங்களாகிய சனி, இராகு, கேது ஆகிய கோள்களுடன் மதிஇருக்க நேரிடுகின்றது, சோதிட அமைப்பில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டு ராசிகள் கூறப்படுகின்றன. இவ்ராசிகளில் ஒன்பது கிரகங்களும் உலாவி வருகின்றன. அங்ஙனம் உலாவும்போது, சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாள் தங்கிச் செல்வதால், தீய கோள்களான சனி, ராகு, கேதுக்களையும் கூடும் வாய்ப்பு ஒவ்வொரு மாதமும் ஏற்படுகிறது. ஆக இவனை வெம்மையுடையவர்களோடு உறவு கொள்ளுவோன் என்றனர்.
சேக்கிழார் ஒரே தன்மையினர். அவரது வாழ்வில் குறைவு இல்லை. என்றும் நிறைவே உண்டு அவரை அரசரும் அந்தணரும் போற்றிப் புகழ்ந்ததை முன்னரே பற்பல இடங்களில் கண்டோம். இதனால் அவரைக் குறைவற்றவர் ; நிறைவுடையவர் என்பது புலனாகிறதன்றோ? சந்திரனுக்கு மாதந்தோறும் பதினைந்து நாள் வளர்ந்து நிறைதலும், பதினைந்து நாள் தேய்ந்து குறைதலும் இயல்பாக உள. இதனை கீழ் நடு மேல் என்னும் மூன்றுலகங்களும் நன்கு அறியும். ஒரு தன்மையர் என்றனர். இதனைத் தேய்குவாய் என்ற அடியில் கூறினர். கிருபா மூர்த்தியாவார் அருள் வடிவினரான சேக்கிழார். ஒருகால் ஒழிவாய் என்றது அடியோடு உருவின்றி இருத்தலை என்க. அதுவே அமாவாசை நாள்,மேல்கூறப்பட்ட குறைகள் பல சந்திரனிடத்து இருந்தும், ஆடவா என்று அழைத்தது சேக்கிழாரது கருணையே ஆகும் என்க.