தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பது
தருமனும் சகுனியும் சூதாடும்பொருட்டு ஆசனத்திலிருத்தல்,
அவிர்ப சும்பொன் மீளி யாளியாசனத்தி ழிந்துபூந்
தவிசி லொன்றி டப்பு குந்துதருமன் வைக
மாமனும்
நவிர றுந்தி சைப்பு றத்துநன்னி லங்கு
றித்துநீள்
புவிபெ றுங்க ருத்தி னோடி ருந்தனன்பொ
ருந்தவே.
(இ -ள்.) தருமன்-, அவிர் பசும்பொன் மீளி யாளி ஆசனத்து இழிந்து - விளங்குகின்ற பசும்பொன்மயமான வலிய சிங்கந்தாங்குவதாகச் செய்யப்பட்ட சிங்காதனத்தினின்று இறங்கி, பூந்தவிசில் ஒன்றிட புகுந்து வைக - அழகியதோர் ஆசனத்திற் பொருந்தித் தங்கியிருக்க, மாமனும் - (துரியோதனனது) மாமனாகிய சகுனியும்,-நீள் புவி பெறும் கருத்தினோடு - (தருமபுத்திர னது) பெரிய இராச்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணத்துடன், நல் நிலம் குறித்து - வெற்றித் தானத்தை ஆராய்ந்தறிந்து, நவிர் அறும்திசைப் புறத்து - குற்றமற்ற அத்திக்கின் பக்கமாக, பொருந்த இருந்தனன்-;(எ - று.)
தருமபுத்திரன் சூதாடுமாறு தான் முன்னிருந்த மிக்க உயரமான சிங்காதனத்தினின்றும் இறங்கி ஓராசனத்தில் முதலில் தங்கியிருக்க, சகுனி தருமபுத்திரனது இராச்சியத்தைக் கவர வேண்டுமென்ற எண்ணத்தினால் அவன் தோல்வியடையும்படி தான் வெற்றித்தானத்தை அறிந்து அத்திசைப்புறமாகத் தங்கியிருந்தனனென்றவாறு. வாதிபிரதிவாதிகளாக இருவர் மாறுபட்டுத் தொழில் செய்யும் பொழுது தாம் இருவரும் இருக்கும் நில வெல்லையைச் சதுரமாகவும், அச்சதுக்கத்தில் மேஷம் முதலிய பன்னிரண்டு ராசிகளும் முறையே இருப்பனவாகவும், கொண்டு, எதிரியுள்ள இடத்திற்குத் தானுள்ள இடம், 4, 7, 9, 11 - இத்தானங்களுள் ஒன்றாய் அமையுமாறு இருந்து தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பது சோதிட நூல்களிற் காண்க.