கோபம், மோகம், தாபம் மற்றும் பொறாமை போன்ற குணங்கள் நம் இயற்கை இயல்பு இல்லை. எப்பொழுது ஒருவரின் அஹங்காரத்தை நீங்கள் அவமதிக்கிறீர்களோ அப்பொழுது கோபம் என்பது அஹங்காரத்தின் பதிலாக இருக்கும். அஹங்காரத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடும் பொழுது மோகம் ஏற்படும். அஹங்காரத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிடில் தாபம் ஏற்படும். அஹங்காரம் தனக்கு கிடைத்ததை பிற அஹங்காரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொறாமை ஏற்படும். பார்த்தீர்களா இந்த அஹங்காரம் எத்தகை விளைவுகளை ஏற்படுத்துகிறது? இயல்பில் ஆனந்தமான நமக்கு இந்த அஹங்காரத்தாலேயே குழப்பங்கள் கூடுகிறது.
தேவப்பிரசன்னம் பார்த்த ஜோதிடக்குழுவினர் ஆன்மீகத்தைவிட ஆணவம் அதிகமாக இருந்தது. தாங்கள் கணித்தவை தவறாகுமா என ஒரு மிதப்பு அவர்களிடம் இருந்தது. அந்த ஆணவக்கோட்டையின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்தார் அந்த பொதுநபர்.
தேவனை நீ பார்க்காமலேயே தேவப்பிரசன்னம் சொல்லும் பொழுது, நான் ஏன் ஜோதிடம் பற்றி படிக்காமலேயே கேள்வி கேட்க கூடாது? என கேள்வியை மட்டும் அவர் எழுப்பவில்லை.. ஜோதிடர்களின் ஆணவத்தையும் தட்டி எழுப்பிவிட்டார்.
தன் நிலையை மறந்து அந்த ஜோதிட குழு தலைவர், அதிகப்பிரசங்கி தனத்திற்கு இது இடமல்ல. சாஸ்திரங்கள் பயின்ற எங்களுக்கு உங்களை போன்றவர்களிடம் விவாதம் செய்ய நேரம் இல்லை என கூறி முகத்தை திருப்பிக்கொண்டார்.
சாஸ்திரம் உங்களுக்குள் சென்றதும் உங்களையே மறந்துவிடும் நீங்கள்.. எங்களை நினைவு வைத்துக்கொள்ள முடியுமா?என கூறிய அந்த நபர் பின்பு தொடர்ந்து பேசத் துவங்கினார்....
பிரசன்னத்தில் 8ஆம் வீட்டில் ராகு அமர்ந்து 10ஆம் வீட்டுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எப்படி விதவைப்பெண் அசுத்தம் செய்தாள் என கணித்தீர்கள்.? 10ஆம் வீடு தலைமை பூஜாரியை (மேல்சாந்தி) குறிக்கும். அப்படியானால் அவர் 8ஆம் வீட்டில் உள்ள ராகுவுடன் தொடர்பு கொள்கிறார். ஆக ராகு என்ற விதவைக்கு களங்கம் மேல் சாந்தி தான் செய்திருக்க வேண்டும். நீங்கள் மாற்றி சொல்லுகிறீர்கள். சில நாட்களுக்கு முன் சூரிய உதய கால பூஜை முடிந்ததும் ஒரு விதவை பெண் மேல் சாந்தியிடம் அர்ச்சனை செய்ய வந்தார். காலையில் விதவையை சந்திப்பதா? என நினைத்து அவரை அவமதித்துவிட்டார் மேல்சாந்தி. இச்செயலே பிரசன்னத்தில் வெளிப்பட்டிருக்கிறது.இறைவன் முன் அனைவரும் சமம் அல்லவா? மேல் சாந்தியிடம் இதைப்பற்றி விசாரியுங்கள் என ஒரே மூச்சில் முழங்கிவிட்டு அசுவாசமானார்.
அனைவரின் பார்வையும் மேல்சாந்தி மேல் திரும்பியது. உடல் நடுங்க நின்று கொண்டிருந்தவர் ஜோதிட குழுவினரின் முன் கைகூப்பி நின்றார். அவரின் தலை கவிழ்ப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை காட்டியது.
தங்களுக்கு தெரியாத விஷயத்தை அற்புதமாக சுட்டிகாட்டியவரை நோக்கி திரும்பினார் அங்கே வெற்றிடமே இருந்தது. அனைவரும் மெய் சிலிர்த்து போனார்கள்.
விதவைப் பெண்ணை அவமதித்த செயலுக்கு பிராயச்சித்தமாக அப்பெண்ணை கோவில் தலைவராக்கி தினமும் அவளுக்கே முதல் மரியாதை செய்தார்கள்.
ஜோதிடர்களும் தங்கள் தவறு செய்தால் தலையில் அடித்து சொல்லித்தர ஒருவர் இருக்கிறார் என மனம் மகிழ்ந்தார்கள்...
தேவப்பிரசன்னம் என்பது இறைவனுடன் உறவாடும் ஒரு செயல் என்பதால் தேவப்பிரசன்னம் பார்க்கும் ஒவ்வொரு ஷணமும் அதியம் நிறைந்தது. இக்கருத்தை அனுபவித்தாலே புரிந்துகொள்ள முடியும்.
சாமீ...இவ்வளவு அதிசயம்னு சொல்றீங்களே அப்ப சபரிமலையில நடந்த தேவப்பிரசன்னம்... திருவனந்தபுரத்தில நடந்த தேவப்பிரசன்னம் பத்தி சொல்லுங்க... அது எல்லாம் உண்மையா?
ஹீ..ஹி...ஹீ...
(பிரசன்னமாகும்)